Monday, March 23, 2015

இசையின் புன்னகை --மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

” இன்னைக்கு யார் கச்சேரிக்குப் போற?
அகாடமில மாண்டலின் வாசிக்கறார்….. அதுக்கு போறேன்….
ஆனால், யார் வாசிக்கறா? என்ற கேள்வி யாரும் கேட்டதில்லை.
மாண்டலின் என்றாலே ஸ்ரீனிவாஸ்தானே எல்லோருக்கும்….
1993 என்று நினைவு…. முதன் முதலில் அப்பா வாங்கி வந்த ஒரு ஒலி நாடா…. மாண்டலின் என்ற எழுத்து பெரியதாயும், நெற்றியில் சிறியதாய் இட்ட திருநீற்றுடன் அப்பா கூறிய தெய்வீக புன்னகை முகம் கொண்ட அவரின் புகைப்படம்.
. கன்யாகுமாரி அவர்கள் வயலின், வலங்கைமான் ஷண்முகசுந்தரம் அவர்கள் தவில்…. ஒரு ஹம்சத்வனி ஆலாபனை. அதில் தொடங்கிற்று அவரின் இசை மீது ஒரு மோகம்…… அதில் அவர் வாசித்திருந்த பிலஹரியும் கதனகுதூகலமும் ப்ரமிக்க வைத்தன.

2001 ல் இசை பயில்வதற்காய் சென்னை கலாஷேத்ரா….. என் பெரியப்பாவான வித்வான் திருவெண்காடு ஜெயராமன் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். காஞ்சி சங்கர மடத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக பெரியப்பாவுடன் சென்றேன். மடத்தின் வாயிலில் காரை விட்டு இறங்கியதுமே ஒரு உருவம் பெரியப்பாவிடம் ஆசி பெற குனிந்து,. மாமா! ஆசிர்வாதம் பண்ணனும்… என்றது.  பெரியப்பா உடனே,மஹராஜனா இருப்பா! என்றார்.  நான் அப்பொழுதுதான் அவரை யார் என்று பார்த்தேன்….. அந்த புன்னகை …. அது , அவர் மாண்டலின் என்று சொன்னது….
(மாண்டலின் அவருக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்ல…. லட்சகணக்கான இசை ரசிர்களுக்கும் அதுவே உண்மை.) 

அன்று அவர் வாசித்த சங்கராசார்யம். அன்று அவர் வாசித்த ராக ஆலாபனை… அந்த இசைத் தந்திகளின் குழைவு….. அந்த ராக பாவம்…. அந்த க்ருதியின் அத்தனை பாவங்களும் அன்று வெளிப்பட்டன. சாஹித்ய பாவம் என்பார்கள்…. அதை இசைக் கருவியிலே அவர் வெளிப்படுத்திய விதம் அலாதி. அன்று அவர் வாசித்த விதத்தில் அங்கிருந்த அனைத்து வித்வான்களும் மெய் மறந்தார்கள். திரும்பி வரும் பொழுது பெரியப்பா சொன்னார்.  இந்த அனாயாசம் வரணும்னா தபஸ் பண்ணனும்.   

2003 ல் டிசம்பர் மாதம் கலாஷேத்ராவில் அவருடைய கச்சேரி…… கலாஷேத்ராவில்  அன்று அவர் வாசித்த ஆபேரி, தேவமனோஹரி, குண்டக்ரியா அவரின் மேதமைக்கு சாட்சி. குறிப்பாக ஆபேரி ராகத்தில் அவர் வாசித்த சில பிடிகள் யாரிடமும் நான் கேட்காதது. அது அவருக்கென்று இறைவன் அளித்த வரம்.  நிகழ்ச்சியின் இறுதியாக அவர் வாசித்தது மாண்டு தில்லானா. அன்று, ரசிகர்கள் மத்தியில் இசை மேதை லால்குடி அவர்கள் அமர்ந்திருந்தார். அன்று கச்சேரி முடிந்தவுடன் லால்குடி அவர்கள் மாண்டலின் அவர்களிடம், ஸ்ரீனிவாஸ், அந்த மாண்டு உன் சொத்து என்றார்
ஆனால், அன்று இசை பயில தொடங்கிய மாணவன் போல, சார், ஏதாவது தப்பா இருந்தா மன்னிக்கனும் சார் என்று கூறினார் ஸ்ரீனிவாஸ்
அதன் பின்னர் ஏராளமான கச்சேரிகள் கேட்க வாய்த்தது. அவருடைய இல்லத்திற்கும் சில முறை சென்று உரையாட வாய்ப்பு கிடைத்தது.
கச்சேரிகளில் ரசிகர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வித்வான்கள் ஒரு ரகம். தனக்கும் ரசிகர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் கச்சேரி நிகழ்த்துபவர்கள் ஒரு ரகம். தான் இசைத்து ரசிகர்களையும் உடன் இசையில் பயணிக்க வைக்கும் வித்வான்கள் வெகு சிலர். ஸ்ரீனிவாஸ் அவர்களோ, ரசிகர்களை தாங்களே ஸ்ரீனிவாஸ் என்று எண்ண வைக்கும் ரகம்.
அவருடன் ராக ஆலாபனைகளில் பயணிப்பதென்பது ஒரு சுகானுபவம். மந்த்ர ஸ்தாயிகளில் அதிர்ந்து, மத்ய ஸ்தாயிகளில் தென்றலாய் பயணித்து, தார ஸ்தாயிகளில் ராகத்தின் உச்சம் தொட்டு, இரண்டாம் காலத்தில் ஒரு அசுர பயணமொன்றை நிகழ்த்தும் அனுபவம். ஆனால் தான் ஒன்றுமே செய்யாதது போல் பால் மணம் மாறாப் புன்னகை ஒன்றினை உதிர்த்து நம்மை மெய் சிலிர்க்க வைப்பார். அதையெல்லாம் விட தந்தியினை ஒரே முறை மீட்டி, அவர் ஸ்தாயிகளை கடந்து செல்லும் லாவகம், அப்போதும் பக்க வாத்ய கலைஙர்களை பார்த்து , பலே என்று சொல்லி ஒரு புன்னகை. அது அவருக்கு மட்டுமே சாத்யம். ரசிகர்களெல்லாம் ப்ரமித்து அமர்ந்திருப்போம். இது போன்று எத்தனையோ தருணங்கள். அசாத்தியமான பிடிகளையும், மிகக் கடினமான ஸ்வரக் கோர்வைகளையும் வாசிக்கும் தருணங்களில் கூட அந்தப் புன்னகை.


2004 ஆம் ஆண்டு திருவையாறு த்யாகராஜ ஸ்வாமிகள் ஆராதனையின் போது, அவர் வாசித்த  நளினகாந்தி ராகம் ஆண்டுகள் பலவானாலும் இன்றும் காவிரிக் கரையினில் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆம்….. ஒவ்வொரு முறையும் நான் திருவையாறு செல்லும் பொழுதெல்லாம் அந்த நளினகாந்தி அந்த நதியின் நளினத்துடன் ஒலித்துக் கொண்டிருக்கும்.
2005 ஆம் வருடம் NDTV walk the talk  என்ற நிகழ்ச்சியில் அவர் விருந்தினர். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கலாக்‌ஷேத்ராவில் நடைபெற்றது. அவர் எங்களுடன் அமர்ந்து உரையாடி அந்த பேட்டியை அளித்தார். அவரை வாசிக்க சொல்லி  நிகழ்ச்சி தொகுப்பாளர் சேகர் குப்தா கேட்டுக் கொண்ட பொழுது, அவர் எங்களையும் உடன் பாட வேண்டும் என்று கூறி, ஸ்ரீ ராகத்தில் அமைந்த ஆதி தாள வர்ணத்தை இசைத்தார். எங்கள் வாழ் நாளில் மறக்க முடியாத சம்பவம் அது.

சொல்லில் அடங்கா பெரும் ப்ரவாஹம் அவரது இசை.கால்த்தையும் கடந்து நிற்கும் அவரது மேன்மை. எல்லாவற்றையும் விட, அவரிடம் அனைவரும் வியப்பது அவரது எளிமை.

இப்பொழுதும் திருவையாற்றின் காவிரிக் கரையினில் த்யாகராஜ  ஸ்வாமிகளின் சமாதிக்கு வெளியில் காவிரிக்கரையின் அருகில் உள்ள மரத்தின் நிழலில் அமர்ந்து  அவர் கமனஸ்ரம ராகத்தில் ராகம் தானம் பல்லவி இசைத்த குறுந்தகட்டினை கேட்டவாறே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கின்றேன். காவிரியில் தண்ணீர் குறைவு. மணல் வெளியில் சிறிது நேரம் நின்றவாறு மேற்கே நோக்குகின்றேன். தொலைவில் பறவைகள் கூடு திரும்புகின்றன். அந்தி மயங்கிய வேளையில் அந்த கமனச்ரம ஆன்மாவை துளைக்கின்றது.  கண்களில் கண்ணீர் நிற்கவில்லை. அவர் இல்லை என்பதை மனம் ஒப்ப மறுக்கின்றது. விதிதான் எவ்வளவு குரூரமானது. ஆனாலும் ஒன்று மட்டும்  நிதர்சனம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் இசை நம்முடன் இருக்கும். அந்தப் புன்னகையும்.

ஏனென்றால் அது இசையின் புன்னகை…….. :)



Sunday, March 4, 2012

விஜயநகரம் - வெற்றியின் சாம்ராஜ்யம்

காலப்பெருவெளியில், வரலாற்று வழித்தடத்தில் ஒரு மிகப்பெரும் பண்பாட்டுக் கூறினை உள்ளடக்கியது நம் நாடு. எத்தனையோ பெரும் சாம்ராஜ்யங்கள் இம்மண்ணில் விளைந்து, கிளர்ந்து, வளர்ந்து, தளர்ந்து ,வீழ்ந்துள்ளன.

தோன்றிய சாம்ராஜ்யங்கள் பலவற்றுள், மிகச்சிலவே சரித்திரத்தின் போக்கை மாற்றியுள்ளன.  நம், தென்னிந்தியாவின் அரசியல், சமூக, கலை வரலாற்றினை மாற்றி அமைத்த சாம்ராஜ்யம் , விஜயநகர சாம்ராஜ்யம். 

ஆம். அன்னியர் படையெடுப்பை துங்கபத்ர நதிக்கரையில் நிறுத்தி , நம் தென்னிந்திய கலாசாரத்தை நிலை நிறுத்திய விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு கலை வரலாறு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. 

இன்று, எண்ணற்ற கோயில்கள், அரண்மனைகள், மாளிகைகள், நினைவுச்சின்னகள் என்று காண்போரை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அழைத்துச்செல்லும் எழில் நகரம் நம் விஜயநகரம். 

ஹம்பி என்று சொன்னால்தான் அனைவரும் அறிவர். துங்கபத்ரை நதிக்கரையில் இயற்கை அன்னை தாலாட்ட, வரலாறு செறிவூட்ட நிற்கும் நகரம் இது. 

எங்கு நோக்கினும் சக்தியடா என்றான் முண்டாசுக்கவி... எங்கு நோக்கினும் கற்றளிகளடா ... என்றுதான் பாட வேண்டும் ஹம்பி சென்றால் ......



மூன்று நூற்றாண்டுகள் தென்னிந்தியாவின் மணிமகுடமாய் நின்ற இந்நகரம் இன்றும் தோற்றப்பொலிவு குறையாமல் நம் கண் முன் வரலாறு கூறி நிற்கின்றது. 

இங்கு இருமுறை சென்ற பெருமகிழ்ச்சியின் விளைவே இந்தப்பதிவு. பல பதிவுகளாக இது தொடரும்.

எங்கு நோக்கினும் குன்றுகள் . அதன் மேல் மணிமகுடமாய் மண்டபமோ, தோரணவாயிலோ, மண்டபமோ நிற்கும்.

நகரத்தின் வரலாற்று ரகசியங்களை அறிந்த ஒரே சாட்சி துங்கபத்ரை நதி. 
அதன் எழிலை, கம்பீரத்தை,பெருக்கை, ஆயிரம் கண் பார்வைகளாலும் அளந்திட முடியாது. 

நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், வாழைத்தோப்புகளும், சிற்றோடைகளும் கொண்ட நகரம் ஹம்பி. பறவைகளும், விலங்குகளும், சற்று கர்வத்துடனேயே வாழ்கின்ற மண் இது. 

வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், தொல்லியல் அறிஞர்களுக்கும் , இந்த நகரம் ஒரு புதையல் .இங்கு ஒவ்வொன்றினையும் தனித்தனியான வடிவமாக பார்த்து அறிவதே இந்த அறிஞர்கள் பணியாக கடந்த அரை நூற்றாண்டாக இருந்து வருகின்றது. 

ஆனால், இந்த நகரத்தை முழுமையாக பார்த்து உணர்வது ஆராய்ச்சியல்ல. அது ஒரு பெரும்தவம். 
அந்தி மயங்கும் மாலை பொழுதில் துங்கபத்ரை நதிக்கரையில் சலசலக்கும் நீரின் ஓசையை உள்மனத்தில் இருத்தினால் நாம் ஐநூறு வருடங்களுக்கு முன் சென்று நிற்போம் . 
இந்த நகரத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது ஒரு தவமே...

தவம் தொடரும் ...


Monday, October 31, 2011

என்றென்றும் ராஜா... இளையராஜா ...-பகுதி ஒன்று

இளையராஜா...... இந்த சொல்லுக்கு மயங்காத தமிழ்நாட்டு மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்....
அவர் இசை தரும் போதை ...... என்னது? போதையா?  என்று கேட்கலாம். 

ஆம். அந்த இசையை ரசிப்பதற்கு பல நிலைகள் உள்ளன..... அதில், கொஞ்சம் முற்றிய நிலை இந்த போதை.... ஒரு பூச்செடியின் மேல் அமர்ந்து தேனை ரசித்த வண்டு . மீண்டும் மீண்டும் அந்த பூவிலே அமருமாம். அந்த மாதிரியான போதை , இளையராஜாவின் இசை என்னும் போதை. 

எண்பதுகளில் தொடங்கி இன்று வரை நீண்டு நிற்கும் ஒரு மாபெரும் இசை தொகுப்பு அவர்.
இசையை பற்றி நுட்பமான விவரம் இல்லாதவராக இருப்பினும் சரி, இசையில் நுண்மான் நுழைபுலம் பெற்றவராக இருந்தாலும் சரி, இளையராஜாவின் இசையை கடக்காமல் அடுத்த கட்டத்தை செல்ல முடியாது.

ஒரு பாடலுக்கான இசையை அமைப்பதிலாகட்டும், இசைக்கருவிகளை தேர்வு செய்வதிலாகட்டும், அவற்றின் அமைவுகளை தீர்மானிப்பதிலாகட்டும், அவருக்கு நிகர் அவர்தான்.....

கிராமிய இசையில் தொடங்கி, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்று பல்வேறு வகையான இசை வகைகளையும் சாமானியனுக்கு கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே...

சில கர்நாடக இசை ராகங்களை அவர் கையாண்டுள்ள விதம் பிரம்மிக்க வைக்கின்றது...




மேலே இருக்கும் காணொளியில் இருக்கும் பாடல் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

இது ஹம்சத்வனி என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்...

பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் இசைகோர்ப்பில் வரும் தாள கதியே பாடலுக்கான ஒரு உணர்ச்சியை கொடுக்கும் வரையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் குழல் இசையில் தாளத்தின் போக்கு திஸ்ரம் எனப்படும் மூன்று மாத்திரைகளை கொண்ட தாள அமைப்பை கொண்டு பாடலுக்கான போக்கினை தெரிவு செய்கின்றது... குழல் இசை தொடங்கும் பொழுது, முன்பு இசைத்த கிடார் திஸ்ரம் கீழ் காலத்தில் இருக்க, டிரம்ஸ் துரித கதியில் இசைக்கபடுகின்றது. குழலினை தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோர்ப்பு  பாடலின் அழகை பன்மடங்கு பெருக்குகின்றது.....


மயிலே மயிலே  உன் தோகை எங்கே என்கின்ற முதல் வரியின் ஸ்வர அமைப்பு ஹம்சத்வனி ராக சாயலை அழகுடன் கொணர்கின்றது. மிருதங்கம் மிக மிக அழகாக இந்த பல்லவியில் இசைக்கப்படுவதை நாம் கேட்கலாம்.
பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் இடையில் வரும் அழகான ஸ்வர பிரயோகங்கள் கிடார் இசையில் தெவிட்டாத தேனாக..... தொடர்ந்து வரும் வயலின் சஞ்சாரங்கள், முடிவில் குழலிசை அழகாக பாடகர் தொடங்கும் இடத்தில் பளிச்சென்று முடிகின்றது.....  முதல் சரணத்தின் தொடக்கத்தில்.... தென்றல் தாலாட்ட தென்னை இருக்க என்ற வரியில், இருக்க , ரி ச நி என்ற அமைப்பு மிக அழகாக அமைக்கப்பட்டு திரு. பாலசுப்ரமணியம் அவர்களால் தென்றல் தாலாட்டுவது போல் பாடப்பட்டும் இருக்கின்றது. அடுத்த வரியின் நீளம் அழகான அளவில் குறைக்கப்பட அது அந்த தாளத்தின் அழகை இரு மடங்காக ஆக்குகின்றது. திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் மிருதங்கம் இன்னொரு மெல்லிசை கருவி போல் பாடல் முழுவதும் படர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையில் வயலினின் அழகிய ஆக்கிரமிப்பு...

இந்த ஹம்சத்வனி கர்நாடக இன்னிசை நிகழ்சிகளில் பெரும்பாலும் முதலில் இசைக்கப்படும் ஒரு ராகமாகும்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் தந்தை ராமஸ்வாமி தீட்சிதர்  உருவாக்கியதே இந்த ஹம்சத்வனி ராகமாகும்.

இதனை பொதுவாக சங்கராபரணம் என்ற ராகத்தில் இருந்து பிறந்தது என்று கூறினாலும் , இதில் இசைக்கபடுகின்ற பிரயோகங்கள் மற்றும்  விதம் இவை அனைத்தையும் பார்த்தல்  இந்த ராகத்தின்
தாய் கல்யாணி ராகம் என்றே தோன்றுகின்றது.


இளையராஜா அவர்கள் ஹம்சத்வனி ராகத்தில் இசை அமைத்த பாடல்களை கேட்கும் பொழுது , ம என்கின்ற ஸ்வரம் மிக நுண்ணியமாக கேட்கும்... ஆம், அந்த ஸ்வரம் கல்யாணி ராகத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்வரம்...
அவரின் இசை ஆளுமை மிகப்பெரியது... அதில் ஒரு பகுதியாவது நம்மால் புரிந்து கொள்ளள முடிகின்றதா என்று பார்ப்போம் ......

ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரு இளையராஜா.......


Thursday, March 17, 2011

கண்டிக்கும் உரிமையும், கல்வி நிலைமையும்

துக்ளக் இதழில் வெளியான கட்டுரைக்கு எதிர்வினை

இரு வாரங்களுக்கு முன்னால் துக்ளக் வார இதழில் சந்திரன் என்னும் கட்டுரையாளர் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கும் உரிமை தேவை என்று ஒரு சிறு பிள்ளைத்தனமான ஒரு கட்டுரையினை எழுதியுள்ளார் . இவரின் பல கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருபவன் நான்.

இந்த குறிப்பிட்ட கட்டுரையில் மாணவர்களை கண்டிப்புடன் நடத்தினால் மட்டுமே நாளைய சமுதாயம் சிறப்பானதாக அமையுமென்றும் தன் எழுத்திற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் .
முதலில் கண்டிப்பு என்றால் என்னவென்று கட்டுரையாளர் விளக்க வேண்டும். ஏதோ கிடைத்த வார்த்தைகளை எழுதி பக்கத்தை நிரப்ப கூடாது. கண்டிப்பு என்றால் தவறு செய்தவர்களிடம் அதை சுட்டி காட்டி அதனுடைய பாதிப்பை அவர்கள் அறிய செய்வது. அதை விட்டு விட்டு மாணவர்களின் தோலை உரிப்பது கண்டிப்பகாது. மாணவர்களை அடிப்பது காட்டுமிராண்டித்தனம். அது பெற்றோர் ஆனாலும் சரி . ஆசிரியர் ஆனாலும் சரி. யாரையும் யாரும் அடிபதற்கு உரிமை கிடையாது. மாணவர்களை சொல்லால் திருத்த கூட பொறுமை இல்லாதவர்கள் எதற்கு ஆசிரிய பணிக்கு வர வேண்டும்?
கட்டுரையாளர் ஒன்டரி தெரிந்து கொள்ளட்டும். இன்றைய தலை முறை மாணவர்கள் ஆசிரியர்களை விட சிறப்பாக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆசிரியர்கள் மிக மிக குறைவு.கட்டுரையாளரின் கருத்துக்கள் சிரிப்பைதான் தருகின்றன. அந்த காலத்தில் எல்லாம் தவறு செய்தால் திட்டுவார்கள் , அடிப்பார்கள் என்ற பயம் இருந்ததாம். அதனால் அன்றைய தலைமுறை மாணவர்களிடம் ஒழுக்கம் இருந்ததாம். உளருவதற்கும் ஒரு அளவு வேண்டாமா சந்திரன்.
அன்றைய தலைமுறை மாணவர்கள்தானே இன்று அதிகாரிகளாகவும் மந்திரிகளாகவும் இருக்கின்றனர்.
ஆனாலும் ஊழலும் லஞ்சமும் தானே அவர்களின் முகவரி...அது ஏன் ?

அன்று பெற்றோர்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமாக வேண்டும் என்று விரும்பினார்களாம். அதற்காக பிள்ளைகளை அடித்து வளர்த்தார்களாம். அடித்தால் ஒழுக்கம் வந்து விடுமா? இப்படி எழுத வெட்கமாக இல்லை.? அன்றைய சமூகத்தில் ஆண்களிடம் ஒழுக்கம் அதிகம் இருந்ததாம். சந்திரன், இன்று பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் பலர் ஐம்பது வயதை கடந்தவர்கள். அதாவது தோலை உரித்து வளர்க்கப்பட்ட அந்நாளைய ஒழுக்க சீலர்கள் ..இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
ஆசிரியர்களிடம் வருவோம். இன்றைக்கு ஆசிரியர்களாக பணி புரிபவர்களில் பலர் வேறு எதுவுமே கிடைக்காத காரணத்தினால் இந்த பணிக்கு வந்தவர்கள். ஆசிரிய பணிக்காகவே தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள் மிக மிக சொற்பம். தகுதியான ஆசிரியர்கள் வெகு சிலரே. இப்படி ஆசிரியர்களே இப்படி இருக்க மாணவ சமுதாயத்தை குறை சொல்வதில் என்ன பயன்?
கட்டுரையாளர் மேலும் சில புரட்சிகரமான கருத்துக்கக்களை கூறி இருக்கிறார். அதாவது சுதந்திர போராட்ட காலத்திலே பல வன்முறைகளை ஆங்கிலேய அரசு கட்டவிழ்த்து விட்ட போதும் இந்திய சமூகம் கட்டுபாடுடன் இருந்ததாம். இதற்கு காரணம் மாணவர்கள் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டதுதான் காரணமாம். சரி! அதற்கு பின் வந்த தலை முறையினர்? அவர்களில் பலர்தானே இன்று நம் நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர்..

இன்றைய மாணவர்கள் இரவு விடுதிகளுக்கு செல்கின்றார்களாம். அதனால் சமூகம் சீரழிந்து விடுமாம். கட்டுரையாளர் முதலில் இது போன்ற இடங்களில் சென்று காணட்டும். நாற்பது வயதை கடந்த ஒழுக்க சீலர்களை அங்கே காணட்டும். முதலில் குழந்தை பிறந்த உடன் சாப்ட்வேர் துறைதான் அதன் எதிர்காலம் என்று முடிவு கட்டும் பெற்றோர்கள் மாறட்டும் .மதிப்பெண் மட்டுமே வாழ்கையின் குறிக்கோள் என்று போதிக்கும் ஆசிரியர்கள் மாறட்டும் . விருப்பத்துடனும் , ஆசிரியப்பணி அறப்பணி என்று என்னும் ஆசிரியர்கள் உருவாகட்டும். பின்னர் , தோலை உரிக்கலாம் . வாலை முறுக்கலாம்.

அஸ்திவாரமே சரியில்லை . அதை விட்டுவிட்டு கட்டிடத்தை குறை கூற வேண்டியது. முதலில் கல்வி முறை மாறட்டும். பின் மாணவ சமுதாயம் மாறும்.